வவுனியாவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்கள் மாகாண சுகாதார அமைச்சரால் அங்குரார்ப்பணம்!!

515

 
வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்குமான அபிவிருத்திக்குழுக்களின் அங்குரார்ப்பணக்கூட்டம் நேற்று (01.08.2016) வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது கருத்துரைத்த சுகாதார அமைச்சர்,

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை பலதுறைகளிலும் அபிவிருத்தி கண்டுள்ளது.

புதிய சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது பலமில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன்கூடிய அவசர விபத்துச்சேவை பிரிவொன்றிற்கான நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதுவரை காலமும் அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடும்போது பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிவதில்லை. அபிவிருத்தியில் மேலிருந்து கீழ்நோக்கிய முறைமையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் தற்போது மாகாண நியதிச்சட்டம் இயற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சட்டபூர்வமாக வைத்தியசாலைகளுக்கான அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று வகையானவர்கள் அங்கம் வகிக்கின்றனர். பதவிவழி நியமனம் பெறும் அரச அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சரின் சிபார்சுடன் செயலாளரால் நியமனம் செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்கலாக மொத்தம் 14 பேர் குழுவில் அங்கம் வகிப்பர்.

ஆகவே வைத்தியசாலையில் காணப்படும் குற்றங்களை மட்டும் குறைகண்டு தெரிவிப்பவர்களாக இல்லாது அதனை நிவரத்திசெய்யக்கூடிய வகையிலான ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியே இந்தக்குழுவின் தலைவராக இருப்பார். அத்துடன் குழுவின் செயலாளராக நியமனம் பெற்றவர்களில் ஒருவரை நியமிக்கலாம். வடக்கு மாகாணத்தின் சுகாதார துறை மேலும் அபிவிருத்தியடைய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், உதவிச்செயலாளர் திருமதி சுஜீவா, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா, மாகாண கட்டிடங்கள் திணைக்கள பொறியிலாளர், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 02 2 4 5