மைதானத்தில் சிறுநீர் கழித்து கிரிக்கெட்டை அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்!!

319

england win

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆஷஸ் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றது. ஆனால் ஒரு போட்டியில் கூட அவுஸ்திரேலியா வெற்றிபெறவில்லை. இதனால் அவுஸ்திரேலிய ரசிகர்களும் வீரர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

ஏற்கனவே ஒரு போட்டி டிரா ஆகியிருந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5வது போட்டியும் நேற்று டிராவில் முடிந்தது. இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

இந்த வெற்றியை இங்கிலாந்து வீரர்கள் தலை கால் புரியாமல் கொண்டாடியுள்ளனர். அதாவது மைதானத்திற்குள் புகுந்து பிட்ச்சில் போய் சிறுநீர் கழித்து விளையாடியுள்ளனர்.

இப்படி பிட்ச்சில் சிறுநீர் கழித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே அதன் வீரர்கள் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பது வரலாறு காணாத செயல் என்று வர்ணிக்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படித்தான் இங்கிலாந்து வீரர் மொன்டி பனேசர் கூட கிளப் ஒன்றில் சிறுநீர் கழித்து கேவலமாக நடந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த சம்பவம் நடந்தது ஓவல் மைதானத்தில். பிரபலமான இந்த ஓவல் மைதான பிட்ச்சில் இப்படி இங்கிலாந்து வீரர்கள் சிறுநீர் கழித்த செயல் ஓவல் மைதானத்திற்குப் பெரும் அவமானமாகியுள்ளது.

கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர்தான் சிறுநீர் கழித்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடன் மேலும் சில வீரர்களும் சம்பவ இடத்தின்போது இருந்துள்ளனர்.