நீதிபதி இளஞ்செழியன் சொன்னதாலேயே முகத்தில் குத்தினேன் : தாக்குதலாளி வாக்குமூலம்!!

580

Attacked

சகோதரிகளுடன் சேட்டை விட்டால் முகத்தில் குத்துங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சொன்னதனாலேயே முகத்தில் குத்தினேன் என ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

உடுவில் பகுதியை சேர்ந்த கே.அதிஷ்டராஜா (வயது 45) எனும் நபர் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.

தனது முகத்தில் நபரொருவர் குத்தி காயமேற்படுத்தியதாக சுன்னாகம் பொலிசாரிடம் காயத்திற்குள்ளானவர் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணையினை மேற்கொண்டனர்.

தனது சகோதரிகளுக்கு தாக்குதலுக்கு இலக்கான நபர் நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து வந்தார் எனவும் , சகோதரிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்களுக்கு முகத்திலையே தாக்குங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறி இருந்ததாக பத்திரிகை செய்திகளில் வாசித்து இருந்தேன்.

அதனாலேயே எனது சகோதரிகளுடன் சேட்டை விட்டவருக்கு முகத்திலேயே தாக்கினேன் என தாக்குதலாளி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தனது வாக்கு மூலத்தை வழங்கினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.