மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் இன்று சோதனைக்குட்படுத்தபடவுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் உத்தரவிற்கு அமைய இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கிணற்றின் அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
மேலும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள தடயப் பொருட்களை பகுப்பாய்விற்கு உட்படுத்தி அறிக்கை பெற்று கொள்ள வேண்டும் என மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில் மூன்று நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
காணாமற் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கிணற்றில் அகழ்வுப் பணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.






