5 வருடத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர் பிடிபட்டார்!!

321

Wedding

ஐந்து வருட காலத்தில் மூன்று மனைவிகளை திருமணம் செய்த நபரை மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 33 வயதான இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன் இரண்டு வழக்குகளில் நீதிமன்றம் இவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தண்டனை விதிக்கப்பட்டு 14 பிடி விராந்துகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

வீடுகளை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட 14 குற்றச்சாட்டுக்களையும் இந்த சந்தேக நபர் எதிர்நோக்கியுள்ளார்.

மனைவியை தாக்கி பாரதூரமான காயங்களை ஏற்படுத்தியமை, மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு நீதிமன்றம் வழங்குமாறு உத்தரவிட்ட இழப்பீட்டு தொகைகளை வழங்காமல் தவிர்த்து வந்தமை போன்ற வழக்குகளுக்கும் இந்த நபருக்கு எதிராக நடந்து வருகிறது.

இவ்வாறான குற்றங்களுக்கு குற்றத்தை ஏற்றுக்கொண்ட இரண்டு வழக்குகளில் இவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் குருணாகல் மெல்சிறிபுர பிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த நபர் மூன்று பேரை சட்டரீதியாக திருணம் செய்துள்ளதாகவும் ஆறு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் இந்த நபருக்கு எதிராக பல திருமணங்களை செய்த குற்றச்சாட்டிலும் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.