கிளிநொச்சி – பளை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் சந்தேக நபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி தம்மை நபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவித்து கிளிநொச்சி – பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியி்ல் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சந்தேக நபர் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவி்த்துள்ளார்.
நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி, தனிப்பட்ட காரணங்களுக்காக தமது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், 22 வயதான நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பளை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த விடுதியின் முகாமையாளர் மற்றும் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அத்துடன், விடுதியின் உரிமையாளரையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.