வயதெல்லையால் வாழ்வாதாரத்தை இழக்கவுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள்!!

289

????????????????????????????????????

கிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டியன் பெர்ணன்டோவிடம் அவர் கையளித்துள்ளார்.
அக்கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபையால், பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் மூலம், பட்டதாரிகள் தொழில்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்காக தங்களுக்கும் கிழக்கு மாகாண சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர். இவர்களுள் சிலர், 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

இந்த ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேறு சில மாகாணங்களில் பட்டதாரி நியமனங்களுக்கான வயதெல்லை 35 விட அதிகமாக இருப்பதால், அது போன்ற ஒரு வாய்ப்பு கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இதனால், அவர்களது வாழ்வாதாரம் அதிகரிக்கும் என்று நான் கருதுகின்றேன். எனவே, இந்த விடயங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.