வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
நல்லூரிலுள்ள செங்குந்தா மரபினர் வருடா வருடம் இக்கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றனர். இதன்படி செங்குந்தா மரபினர் இல்லத்திலிருந்து கொடிச்சீலை யாழ். சட்டநாதர் சிவன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
அங்கிருந்து திருவூர்தி மூலம் காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது. அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று, சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது.
இதேவேளை, இன்று காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன், நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.