பாகிஸ்தானில் வைத்தியசாலையில் குண்டுவெடிப்பு : 55 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்!!

501

Pak

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 55 பேர் பலியானதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவெட்டா நகரத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று (திங்கள்கிழமை) காலை பணிக்கு செல்லும்போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

பிலால் அன்சாரியை அவரது சக பணியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவமனைக்கு வெளியே வழக்கறிஞர்கள் காத்துக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே 55 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் கலவரம் வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.