இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண்கள் உட்பட 79 நேபாளப் பிரஜைகள் மீட்பு!!

565

Nepal

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 79 நேபாளப் பிரஜைகள் கடந்த சில வாரங்களில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் 19 பேர் இலங்கையில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்களாதேஷில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக, நேபாள வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களும் பெண்கள் என, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் 22 பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நேபாள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நேபாளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆட்கடத்தல்காரர்கள் நேபாளத்தில் உள்ள பெண்களை வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபோர் தீவுகள் ஊடாக கடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த பெண்களை இலங்கை பொலிஸாரின் உதவியுடன் மீட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நேபாள பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் மலேசியா போன்ற நாடுகளுக்கு நடனக்காரர்கள், பார் ஊழியர்கள் மற்றும் பணிப் பெண்கள் போன்ற வேலைகளுக்கு இவ்வாறு அழைத்துச் செல்லப்படுவதாக அந்த நாட்டுப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்துடன் இந்த விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நேபாள அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.