ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

304

Sucide

கொடைக்கானல் தனியார் விடுதியில் கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளிட்ட 4 பேர் விஷமருந்தியதில் கணவரைத் தவிர மற்ற மூவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (48). இவரது சகோதரர் மணிகண்டன். இவர்களது நிலத்தில் சுப்பிரமணி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை மணிகண்டன் தனக்கு வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி, வீடு கட்டுவதற்குச் செலவான 7 லட்சத்தை தருவதென்றால் விட்டை அவரது பெயருக்கு எழுதி தருவதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், சுப்பிரமணியின் குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுப்பிரமணி, அவரது மனைவி கௌசல்யா (34), மகள்கள் ஜனனி (17), இலக்கியா (14) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து நிலையத்தின் பின்புறம் பிலிஸ்விலா பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

திங்கள்கிழமை இரவு சுப்பிரமணி, தான் வைத்திருந்த விஷ மருந்தை குளிர்பானத்தில் கலந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் அதிகாலையில் திடீரென சுப்பிரமணி தங்கியிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, விடுதியில் இருந்தவர்கள் அறைக்கு வந்து, ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் வழியிலேயே கௌசல்யா மற்றும் மகள்கள் ஜனனி, இலக்கியா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த ஜனனியின் கையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், எங்களது வீட்டை அபகரித்து, பணமும் கொடுக்காமல் ஏமாற்றிய சித்தப்பா மணிகண்டன்தான் எங்களது சாவுக்குக் காரணம் என எழுதப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடிதத்தைக் கொடைக்கானல் பொலிசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.