டெல்லியைச் சேர்ந்த ஃபைஷான் படேல்- சனா தம்பதியர் ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை முடித்து நேற்று (ஓகஸ்ட் 8) விமானம் ஏற வேண்டிய சூழலில் சனாவின் கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டது.
சனாவின் கடவுச்சீட்டு தொலைந்தாலும் அவரது கணவர் ஃபைஷான் படேல் தனியாக தேனிலவுப் பயணத்துக்கு விமானம் ஏறிவிட்டார். விமானத்தில் ஏறிய படேல் தனது இருக்கைக்கு பக்கத்தில் மனைவியின் புகைப்படத்தை ஒட்டி வைத்து ´மனைவி இல்லாமல் தேனிலவு பயணம் செய்கிறேன் என்று ட்விட் செய்தார்.
அந்த ட்விட்டை பார்த்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உங்கள் மனைவியை உடனடியாக என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள். நாளை அவருக்கு டூப்ளிகேட் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று பதிலளித்தார்.
அதன்படி சனாவுக்கு டூப்ளிகேட் கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சனா தேனிலவுக்கு போய் சேர்ந்தாரா என்பது குறித்து எந்தவித தகவலும் இதுவரை இல்லை.