குடும்ப பிரச்சினை காரணமாக கணவனே மனைவியை காருடன் எரித்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா(29). இவருக்கு சுரேஷ் என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மேனகா என்ற மகள் உள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர். பின்னர், தன் மகள் மேனகாவுடன் தாய் வீட்டுக்கே பிரேமா சென்றுள்ளார்.
இதற்கிடையே நாகராஜன்(33) என்பவருடன் பிரேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழமுடிவு செய்தனர். அதன்படி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் நாகராஜனும் பிரேமாவும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு நாகராஜன் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நாகராஜன், பிரேமாவுடன் தேனாம்பேட்டையிலேயே தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யுஷ்வந்த்(4), நிஷந்த் ராஜ்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே நாகராஜனின் தாய், உன் மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு புதியதாக கட்டியுள்ள செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துவிடு என அழைத்துள்ளார். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நாகராஜன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்கல்பட்டில் உள்ள புதிய வீட்டில் வசித்து வந்தனர்.
அப்போது நாகராஜன் அம்மாவுக்கும் மனைவி பிரேமாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சண்டை போட்டு கொண்டு பிரேமா இரண்டு மகன்களுடனும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் நாகராஜன் செங்கல்பட்டிலேயே தாயுடன் வசித்து வந்துள்ளார். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் குழந்தைகளை நாகராஜன் வந்து பார்த்து, செலவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேமா உறவுக்காரர் கணேசன் என்பவரின் காரை எடுத்து கொண்டு நாகராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை செங்கல்பட்டுக்கு அழைத்து செல்ல வந்துள்ளார்.
பின்னர் மனைவி மகன்களுடன் தனது உறவினர் காரில் புறப்பட்டு சென்றனர். காரை நாகராஜன் ஓட்டிச் சென்றார். நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது காரின் உள்ளே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பிரேமா மற்றும் இளைய மகன் நிஷந்த் ராஜ் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஓடும் காரில் தீவிபத்து ஏற்பட்டதால் பொது மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தால் நாகராஜன் மற்றும் மூத்த மகன் யஷ்வந்த் காயங்களின்றி உயிர்தப்பினர். காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதற்கிடையே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பிரேமா இறக்கும் முன்பு பொலிஸாரிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ளதாவது, நாகராஜன் செங்கல்பட்டில் உள்ள வீட்டிற்கு பிரேமாவையும் இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஓடும் காரிலேயே நாகராஜன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பிரேமா மீது ஊற்றி காருடன் தீவைத்துவிட்டு அவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய பிரேமா தனது குழந்தைகளை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரேமாவின் மூத்த மகன் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு அப்பா செருப்பு வாங்கி கொடுத்தார். பின்னர் காரில் வீட்டிற்கு வரும் போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது அம்மா, பையில் இருந்த பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றி தீ வைத்து கொண்டார்” என கூறியுள்ளான்.
இதையடுத்து உயிரிழந்த பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தின்படி சைதாப்பேட்டை பொலிஸார் நாகராஜனை கைது செய்தனர்.