சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த பேரழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி சங்கர் இன்று கேரளாவில் காலமானார்.
57 வயதான அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சசி சங்கருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மலையாள திரைப்பட உலகில் முன்னணி இயக்குனரான சசி சங்கர், 1993ல் இயக்கிய நாரயம் என்ற திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. திலீப்பை கூன் விழுந்தவராக வைத்து மலையாளத்தில் இவர் இயக்கிய குஞ்ஞி கூனன் திரைப்படத்தைதான் பின்னர் சூர்யாவை வைத்து தமிழில் பேரழகன் என்ற பெயரில் இயக்கினார்.
பகடை பகடை என்ற தமிழ் திரைப் படத்தையும், மலையாளத்தில் 10 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மரணம் அடைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.






