உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள்!!

1195

Sri Lanka AL OL Exam students sitting Education Photo

 

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை கடந்த வாரம் முதல் ஆரம்பமாகியிருந்தது. குறித்த பரீட்சையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் நாடு முழுவதிலுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 315605 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்ற அனுமதி பெற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் உயர் தரப் பரீட்சை ஆரம்பமான முதல் இதுவரை மாணவர்கள் மேற்கொண்ட மோசடி செயற்பாடுகள் தொடர்பாக இதுவரையில் 48 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சில முறைப்பாடுகள் பரீட்சார்த்திகளின் மோசடிகள் தொடர்பாகவும், பரீட்சை நோக்குநர்களின் நடத்தை தொடர்பானதாகவும் அமைந்துள்ளது. எனவே குறித்த மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு 5 ஆண்டுவரை அனைத்து அரசாங்க பரீட்சைகளிலும் பங்குபற்றுவதை தடை செய்வதற்கும், ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தில் வாய்ப்பு உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.