வவுனியா நகரசபை ஊழியர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12.08.2016) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை வாயில் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இன்று காலை 9.00 மணியளவில் வவுனியா நகரசபை வாகனங்களை வெளியே செல்லவிடாது வவுனியா நகரசபை வாயிலில் ஊழியர்களாகிய எமக்கு அரசாங்கம் நிர்ணயித்த சம்பளத்ததை வழங்க வேண்டும் என பல்வேறு பாதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
கோல்டன் சித்திரன் என்பவருடைய இடைநிறுத்திய சம்பளமானது வழங்கப்பட வேண்டும், பணித்தடை செய்யப்பட்ட நான்கு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும், நகரசபைச் செயலாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நகரசபை ஊழியர்கள் மற்றும் நகரசபை செயலாளருடன் கலந்துரையாடி இரண்டு வாரத்தில் ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தமையையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.









































