சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்களது வழக்கறிஞர் நேற்று கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு, நேற்று அழைக்கபட்ட போது கருத்தக்களை தெரிவித்த சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அஜந்தா லக்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு இந்திய பிரஜைகளின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
சிறைச்சாலைக்குள் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய வழக்கறிஞர், அவர்களை உடனடியாக மிரிஹானையில் அமைந்துள்ள முகாமிற்கு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோள் அடுத்த வழக்கு தினத்தில் ஆராயப்படுமென்று கூறிய நீதிபதி, சந்தேக நபர்களை வரும் 30ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் இந்த சந்தேக நபர்கள் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-பிபிசி-






