சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரோலியா சென்ற 6 பேர், இன்று இலங்கைக்கு மீளவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி, கடல் வழியாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.
தொடர்ந்து 12 நாட்கள் படகில் பயணித்த இவர்கள், அவுஸ்ரோலியா கடற்பரப்புக்குள் செல்லும்போது, படகு பழுதடைந்து 4 நாட்களாக கடலில் தத்தளித்துள்ளனர்.
இதையடுத்து, அவுஸ்திரேலியா கடற்படையினர் இவர்களை மீட்டு கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த படகையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அவர்கள் அங்கிருந்து உடனடியாக விஷேட விமானம் மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரும் இன்று காலை 8.15 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து இவர்களை கைது செய்த விமான நிலையப் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.






