கடந்த 30 வருடங்களாக விமானப்படையினர் வசமிருந்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானம் மீண்டும் பாடசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் பிரதேசத்தில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானம் வவுனியா விமானப்படை முகாமிற்கென சுவீகரிக்கப்பட்டிருந்தது.
இந்த மைதானம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு பாடசாலையின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பாடசாலையின் அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






