நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு “புதிய நாடு – ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் கொண்டாட்ட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் கூட்டிணைவால் நாட்டில் முதல்தடவையாக இணக்க அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கோடிட்டுக் காட்டக்கூடிய ஒரு மைல் கல்லாக இது அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்ட புதிய வேலைத்திட்டமொன்றை நாட்டில் முன்னெடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
முன்னைய அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை ஒழித்து, வெளிப்படைத் தன்மையுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதும் புதிய அரசாங்கம் எதிர்நோக்கியிருந்த மற்றுமொரு சவாலாக அமைந்தது.