தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை!!

306

Shooting

தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த தலித் சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர் தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஜக்பாலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பொலிஸ் தலைமை கண்காணிப்பாளர் பிரகாஷ் குமார்.