புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு நுரையீரலில் ஒரு பகுதியை இழந்த 54 வயதுடைய சன்டியாகோ லெங், மிகவும் கடினமான பாய்மரப் படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் எத்தகைய தடைகள் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு இலக்கை அடைய முடியும் என்பதை சன்டியாகோ நிரூபித்துள்ளார்.
ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான படகோட்டப் போட்டிகள் மரினா டா குளோறியா நீர்நிலையில் நடைபெற்றன.
செவ்வாயன்று நடைபெற்ற நக்ரா 17 கலவை இரட்டைப் பாய்மரப் படகோட்டப் போட்டியில் 29 வயதுடைய சிசிலியா கரன்ஸா சரோலியுடன் ஜோடி சேர்ந்து ஆர்ஜன்டீனாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
பாய்மரப் படகோட்டத்தில் பங்குபற்றிய வீரர்களில் வயதில் மூத்தவரான சன்டியாகோ சிரமங்களை எதிர்கொண்டு வந்த வருடத்தில் உரிய பலனை ரியொ ஒலிம்பிக்கில் பெற்றுக்கொண்டார்.
படகோட்டத்தில் பங்குபற்றும் அவரது இரண்டு மகன்மாரான யாகோ, க்ளோஸ் ஆகிய இருவரும் தந்தையின் வெற்றியைக் கொண்டாடுமுகமாக கரையிலிருந்து நீந்திச் சென்று தந்தையை ஆரத்தழுவி பாராட்டினர்.
கடந்த வருடம் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட சன்டியாகோ லெங், இதற்கு முன்னர் 5 ஒலிம்பிக் அத்தியாயங்களில் பங்குபற்றியிருந்ததுடன் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தார்.
இதனை அடுத்து தென் அமெரிக்காவில் முதல் தடவையாக நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
கடந்த ஐந்து அத்தியாயங்களில் வெல்ல முடியாமல் போன தங்கப் பதக்கத்தை இம் முறை வென்றதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக சன்டியாகோ லெங் தெரிவித்தார்.