சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கம நிகழ்வு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று(21.08.2016) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரித்தானியாவின் லண்டனை தலமையகமாக கொண்டு இயங்கம் சர்வதேச இந்து இளைஞர் பேரவை என்ற அமைப்பு பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவி சமய, கலை, கலசார தமிழர் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் வகையிலான பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றது.
இந்நிலையில் இவ் அமைப்பின் இலங்கை கிளையின் 3வது முத்தமிழ் சங்கமம நிகழ்வு தமிழர் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பல கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
பேரவையின் தலைவர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நந்திக் கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல், பஞ்சபுராணபாராயணம், தமிழ்மொழிவாழ்த்து, என்பவற்றை தொடர்ந்து ஆதிவிநாயகர் நடனப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம், வரவேற்புரையை பேரவையின் உப செயலாளரும் ஊடகவியலாளருமான கி.வசந்தரூபன், ஆசியுரையை ரவீந்திர உமாசுதக்குருக்கள், பிரபாகரக்குருக்கள் வழங்கியதுடன், அதனை தொடர்ந்து தொடக்கவுரையினை சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உபதலைவர் வீ.பிரதீபனும், வாழ்த்துரையினை தமிழ்மணி. மேழிக்குமரன் வழங்கினர்.
நாம் தொலைத்துவிட்ட பண்பாட்டு விழுமியங்கள் எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி செ.மதுரகனின் சிறப்புரையும், வாத்திய கலாலய மாணவர்களின் வாத்திய கானாமருதம் நிகழ்வும், கீர்த்தனாலயா இசைக் கூட மாணவர்களின் தமிழிசை நிகழ்வும், நுண் கலைமாணி திருமதி. புவனறூபி ஜெகதீசனின் மாணவி பைரவி இராஜேந்திரம் அவர்களின் ருத்ரதாண்டவம் நடன நிகழ்வும், ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் வன்னியின் சிவலிங்க வழிபாடு பற்றிய ஆய்வுப் பார்வை,
தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் காலவோட்டத்தில் இன்று தமிழர் பண்பாடு தளர்ந்துவிட்டதா? வளர்ந்துநிற்கிறதா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் நடைபெற்றது. தளர்ந்துவிட்டது எனும் தலைப்பில ஜெ. மயூரசர்மா, ஜெ.கோபிநாத், ஆ.ஜெசிதா ஆகியோரும்வ ளர்ந்துநிற்கிறது எனும் தலைப்பில் எஸ்.எஸ். வாசன், ஜெ. திருவரங்கன், ந. ஜெனன் ஆகியோரும் வாதிட்டனர்.
இந் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன், கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்ல தலைவர் தி.இராசநாயகம், தொல்லியல்துறை ஆய்வாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அருணா.செல்லத்துரை, யாழ் பல்கலைக் கழக இசைத்துறை விரிவுரையாளர் ந. பரந்தாமன் ஆகியோரது சேவையைப் பாராட்டி சிறப்பு பட்டம் வழங்கி சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தமிழ்நாடு கூனம்பட்டி ஆதின 57 வது குருபீடம் ராஜ சரவண சுவாமிகள், சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலை கழக இந்து நாகரிக துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலர் கா.உதயராசா, வவுனியா மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், விசேட விருந்தினராக பேரவையின் அமைப்பாளர் சி.கணேஸ்குமார் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.













































