மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம் இரவும் பகலும். பல வருடங்களுக்குப்பின் இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. இதில் மகேஷ், அனன்யா, ஜெகன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பாலா ஸ்ரீராம் இயக்குகிறார். தீனா இசையமைக்கிறார்.
இப்படத்தை ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் பெரியசாமி தயாரிக்கிறார். பகலில் கல்லூரி மாணவராகவும் இரவில் திருடனாகவும் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலும் எதிர்பாராத சம்பவங்களை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகின்றனர்.
படம் குறித்து இயக்குனர் பாலா ஸ்ரீராம் கூறும்போது நடுத்தர வர்க்கத்து குடும்ப பாசம் மற்றும் நகைச்சுவையுடன் புதுமையான காதல் படமாக இது தயாராகிறது. கதை சொல்லும் பாணியில் புதிய முயற்சியை கையாண்டிருக்கிறோம். அனன்யா கதை கேட்டதும் மிகவும் பிடித்துபோய் ஒரே ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் பெற்றுக்கொண்டு நடிக்க வந்தார். இந்த படமும், கதாபாத்திரமும் தன் சினிமா பயணத்தில் தனி இடத்தை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் மகேஷ் நடித்தார் என்று அவர் கூறினார்.