வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல்தாங்கிய பாதயாத்திரை வருடாவருடம் இடம்பெறும் நிகழ்வு இம்முறையும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு இம்முறை ஆறாவது தடவையாக எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளது.
ஆலய நிர்வாகியும் அறநெறிச் செல்வியுமான கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் ஆரம்பமாக உள்ள பாதயாத்திரையில் பெருந்திரளான நல்லூர்க் கந்தன் அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் வேல்தாங்கிய பாதயாத்திரைக் குழுவினர் மன்னார் வீதியூடாக வவுனியா நகரை அடைந்து பின்னர் A9 வீதியூடாக நல்லூர் கந்தன் ஆலயத்தினை நோக்கி புறப்படும்.
பாதயாத்திரை பயணிக்கும் பாதையிலுள்ள இந்து ஆலயங்களில் நிர்வாக சபையினர் மற்றும் அடியார்கள் பாதையாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவுள்ளனர்’ என்று அறநெறிச் செல்வி கு.ஜெயராணி தெரிவித்துள்ளார்.