கைதுசெய்யப்பட்ட நரிக்கு விளக்கமறியல்!!

539

VM

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்ட நரி எனப்படும் குணசேனவை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து நரி என்பவர் தப்பிச்சென்றதையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இது தொடர்பில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகளும் நரி கைதுசெய்யப்படும் வரையில் ரத்துச்செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபரை கைதுசெய்வதற்கு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன் மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் உதயகாந்தன் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு நரி தேடப்பட்டுவந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் நரி கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.