வவுனியா பண்டாரிகுளத்தில் வீதியில் மின்சார கம்பி அறுந்த நிலையில், மின்சாரசபைக்கு மக்கள் பலதடவை தெரியப்படுத்தியபோதும், இரண்டு மணிநேரம் தாமதமாகவே மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா பண்டாரிகுளத்தில் மின்சார கம்பியொன்று வாகனத்தில் முட்டி அறுந்துள்ளது. அறுந்த மின்சாரக் கம்பி வீதியின் அருகே கிடந்த சமயத்தில் இதனை பார்வையுற்ற பொதுமகன் ஒருவரால் வவுனியா இலங்கை மின்சார சபைக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தங்களுக்கு வடமாகாண இலங்கை மின்சாரசபை அறிவித்தால் தான் செல்வோம் என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகண இலங்கை மின்சார சபை தொலைபேசிக்கு பலமுறை தொடர்புகொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை. ஒரு மணிநேரத்தின் பின்னர் பதிலளித்த மின்சாரசபை விரைந்து இதனை சீர்செய்வதாக தெரிவித்தனர்.
மாலை 4.30 மணியளவில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் 6.30 மணிக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வருகைதந்த மின்சாரசபையினர் அறுந்த கம்பியினை சீர்செய்தனர்.
அறுந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கி யாராவது உயிரிழந்தால் யார் பொறுப்பு?
இவ் வீதி அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வீதியென்பதும், மாலை நேரங்களில் அதிகமாக மாணவர்கள் தனியார் வகுப்புகள் முடிந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.
இவ் விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எனது மகன் மாலை நேரத்தில் இவ் வீதியில் தான் விளையாடுவார். அறுந்த மின்சாரக் கம்பி தாக்கினால் யார் பொறுப்புக் கூறுவது?
மின் பட்டியல் செலுத்தாவிட்டால் உடனடியாக மின்சாரத்தினை துண்டிக்கும் வவுனியா மின்சாரசபை இவ்வாறான சம்பவங்களில் அலட்சியமாக இருக்கின்றது எனத் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.











