திருட்டுத்தனமாக சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்வது, இலங்கை தமிழர்கள் தான் என்கிற போது அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது என சேரன் கூறியுள்ளார்.
திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சேரன் கூறியதாவது, திரைப்படங்களை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும், சமூக வலைதளமாக இருக்கட்டும், ஆனால் அது முறையாக இருக்கவேண்டும்.
திருட்டுத்தனமாக இருக்ககூடாது, அதில் பலரது உழைப்பு இருக்கிறது. நாம் தமிழன் என்று சொல்கிறோம், ஆனால் தமிழன் தான் இத்தகைய செயல்கள் எல்லாம் செய்கிறான் என்கிற போது அதிர்ச்சி அளிக்கிறது.
வரும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்வது இலங்கை தமிழர்கள் தான் என்று கூறுகிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்காக ஒட்டு மொத்த திரையுலகமே ஒன்றாக போராடினோம். அதனால் பல விசயங்களை நாங்கள் இழந்தோம், அதையும் மீறி போராடினோம்.
இதை அறிந்தும் அதை சார்ந்த சிலர் தான் இதை செய்கிறார்கள் என்கிற போது, அவர்களுக்காக ஏன் தான் போராடினோம் என்று அருவருப்பாக இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகநூலில் பெண் ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முக்கியமாக, ஒருநாள் இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் போராட்டம் நடத்திவிட்டு சென்று விட்டீர்கள், வேறு என்ன செய்தீர்கள்.
ரகுமான், ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம், வெளிநாட்டில் கச்சேரி நடத்தி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், அதற்கு இலங்கை தமிழர்கள் வேண்டுமா?.
முதலில் ஊரில் உள்ள திரையரங்கில் டிக்கெட் விலையை குறைக்க சொல்லுங்கள், பிறகு மக்கள் திரையரங்கில் வந்து படம் பார்ப்பார்கள் என கூறியுள்ளார்.