இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று(27.08.2016) பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.
வவுனியா வந்தடைந்த பாதையாத்திரையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி ரோகண புஸ்பகுமார, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் அரச ஊழியர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள், சமயத்தலைவர்கள் எனப் பலரும் வரவேற்றனர்.
இலங்கை மனித உரிமை அமைப்பினரால் வடபகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கப் பயணத்தின்போது சில வாகனங்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் அணிந்திருந்த உடை போன்றவற்றில் தமிழ் மொழி நிராகரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை அறிந்த ஊடகவியளாலர்கள் ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஏற்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதையடுத்து ஏற்பாட்டாளர்கள் தமது தவறினை உணர்ந்து ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக்கோரியதுடன் இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது என தெரிவித்தனர்.