போரின் அலைகள் மோசமாக தாக்கிய பின்னும் நிமிரும் துணிவுடன் வன்னியின் பல்வேறு மட்டத்தினரும் நகர்கையிலே, இன்னுமொரு வெளிப்படுத்தலாக மாற்றுத்திறனாளிகள் ஒழுங்குபடுத்தலில் வன்னிஸ்வரம் எனும் இசைக்குழு நேற்றுமுன்தினம் (27.08.2016) சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டது.
‘புதிய பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இந்த நிகழ்விற்கு யோ.புரட்சி தலைமை தாங்கினார். வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
வன்னியின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் யுத்த காலத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலாக இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ள இருந்தபொழுதும் சுகவீனம் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது செய்தி வாசிகப்பட்டது.
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் இசைக் கருவியினை புதிய பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகளிடம் கையளித்து இசைக் குழுவினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கடந்த காலங்களில் வன்னியில் தம் இசைத்திறனினை வெளிப்படுத்திய அநேக பாடகர்கள் இந்த இசைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.














