வவுனியா மண்ணில் இருந்து வலம்வரும் பிருந்தாவனம் இதழின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்றுமுன்தினம் (27.08.2016) காலை 10.00 மணிக்கு வவுனியா வாடி வீடு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கவிஞர் மாணிக்கம் ஜெகன் தலைமை வகித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை மாணவி நிரோஜினி இசைத்தார். வரவேற்பு நடனத்தினை மாணவி ரோசித்தா வழங்கினார். வரவேற்பு உரையினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரன் வழங்கினார். ஆசியுரைகளை சமயப் பெரியோர்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் யோ.புரட்சி தலைமையில் ‘பெற்றோர்களை அதிகம் கவனிப்பது ஆண் பிள்ளைகளா? பெண் பிள்ளைகளா? எனும் தலைப்பில் விவாத அரங்கு இடம்பெற்றது.
இவ்விவாத அரங்கில் கவிஞர் மன்னார் பிரதீப், பல்கலைக்கழக மாணவர்களான கிருஷனா யோகநாதன், கட்சன் குரூஸ், யூலியஸ் ஜெயராஜ் லோகு மற்றும் வேதிகா பிரபாகரன், மிதிலைமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையினை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கினார். சிறப்புரையினை சற்பிரசங்க சைவமணி சண்முகரத்தினம் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கவிஞர் குரும்பையூர் ஐங்கரன் தலைமையில் ‘இம்மண்ணில் என் கண்ணில் படுவதெல்லாம்’ எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான சச்சிதானந்தம் கஜன், ஜெகதீசன் கோபிநாத், கஜரதி பாண்டித்துரை, நந்தீஸ்வரி மாயவன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு நடனமாக மாணவி அழகேந்திரன் பிரம்மியா அவர்களின் நடன ஆற்றுகை இடம்பெற்றது.
நிகழ்வில் பிருந்தாவனம் இரண்டாம் ஆண்டு சிறப்பிதழினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை அண்ணா நகர் பரமேஸ்வரா வித்தியாலய முன்னாள் அதிபர் லில்லி புளோரா நடேசமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இதழின் ஆய்வுரையினை விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். கவிஞர் காக்கேயன்குளம் ஹுசைன் அவர்களின் வாழ்த்துக்கவி தொடர்ந்து இடம்பெற்றது.
பிருந்தாவனம் இதழின் இரண்டாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதிஷ்ட இலாப பரிசுக் குலுக்கலும் இடம்பெற்றது.
பிருந்தாவனம் இதழின் வளர்ச்சி பற்றிய பகிர்வினை வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் வழங்கினார். நிறைவாக ஏற்புரையினை பிருந்தாவனம் இதழின் ஆசிரியர் சிவராணி வழங்கினார். பிருந்தாவனம் இதழானது வவுனியா மண்ணில் இருந்து பல மாவட்டங்களிலும் விநியோகிக்கப்படும் கலை, இலக்கிய, கல்வி இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.