இங்கிலாந்து ஒதுங்கினாலும் சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் : பிரான்ஸ்!!

371

Hollande

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் முடிவு செய்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் கமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க இராணுவ அமைச்சர் சக் ஹகெல் ஒவ்வொரு நாட்டுக்கும் சில விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளது. அந்நாடுகளின் பொறுப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிரியா மக்களின் மீது கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட இரசாயன குண்டு தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மீண்டும் சரிப்படுத்த முடியாத தீங்கான நடவடிக்கை ஆகும்.

சிரியா மக்களுக்கு இந்த மிகப்பெரிய கொடுமையை இழைத்த செயல் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது. பஷர் அல் அசாத் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இங்கிலாந்து பங்கேற்காவிட்டாலும் இது தொடர்பாக நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் தயாராக உள்ளது.

சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் தயாராக உள்ளபோதிலும், எங்களது தலையீட்டை நியாயப்படுத்துவதற்குள தேவையான சூழ்நிலை உருவாகும் வரை பிரான்ஸ் காத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.