ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பிரகாசித்த இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் BMW கார்களை பரிசாக வழங்கினார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்த தீபா கர்மாகர் ஆகியோருக்கு ஐதராபாத் நகரில் நேற்றுமுன்தினம் மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மேற்படி மூன்று வீராங்கனைகளும் BMW ஆடம்பர கார்களை சச்சின் டெண்டுல்கர் பரிசளித்தார்.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பயிற்றுநர் கோபிசந்தும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கரும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
மேற்படி 3 வீராங்கனைகளுக்கும் BMW ஆடம்பர கார்களை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர், இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ‘உங்களால் இந்த நாடு பெருமையடைகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதில் நீங்கள் எவ்வளவு துடியாய் இருந்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணம்.
நீங்கள் இந்த நாட்டுக்கு அளிக்கவிருக்கும் ஆச்சரியகரமான தருணங்களுக்காக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வென்றுகொண்டேயிருங்கள்’ என்றார்.
அதேவேளை பட்மிண்டன் பயிற்றுநர் கோபிச்சந்திடம் ‘எப்போதும் சாம்பியன்களை உருவாக்குவதில் உங்கள் பணி அபூர்வமானது. பயிற்சியாளராக அபாரமான குணநலன்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் ரோல் மொடல்’ என சச்சின் கூறினார்.
இந்நிகழ்வில் பட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பேசுகையில், கடந்த தடவை சச்சின் தனக்கு கார் பரிசளித்த போது, ஒலிம்பிக் பதக்கம் வென்றால் இன்னொரு கார் பரிசளிப்பதாகக் கூறியதை நினைவு கூர்ந்தார்.
எனது கனவு நிஜமானது, அனைவருக்கும் நன்றி, கோபிசந்துக்கும் மிக்க நன்றி என்றார். சாக்ஷி மாலிக், திபா கர்மாகர் ஆகியோரும் சச்சினுக்கு நன்றி தெரிவித்தனர்.







