சம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்!!

379

chambian

சம்பியன்ஸ் லீக் டT20 தொடரில் மைக்கல் ஹசி, ஷேன் வட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 17ம் திகதி முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை நடக்கிறது.

இதில், 6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா (3), அவுஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), மேற்கிந்திய தீவுகளைச் (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

ஐதராபாத்தில் செப்டம்பர் 17-20ம் திகதிகளில் நடக்கும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

பிரதான சுற்றில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஏ பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. செப்டம்பர் 21ம் திகதி நடக்கவுள்ள ஏ பிரிவுக்கான லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன.

இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் உத்தேச அணியை அறிவித்தன. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டை சேர்ந்த உள்ளூர் அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள 15 வெளிநாட்டு வீரர்களில் 11 பேர் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.

இலங்கையின் சங்கக்கார (கந்துரடமரோன்ஸ்), நுவன் குலசேகரா (கந்துரட மரோன்ஸ்), அவுஸ்திரேலியாவின் பிராட் ஹக் (பெர்த்), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (லயன்ஸ்) ஆகியோர் மட்டும் உள்ளூர் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை தங்களது அணிக்காக விளையாட தெரிவு செய்யும் இந்திய அணிகள் சம்பியன்ஸ் லீக் விதிமுறைப்படி, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ள உள்ளூர் அணிகளுக்கு நஷ்ட ஈடாக ஒரு வீரருக்கு தலா ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்:

மேற்கிந்திய தீவுகள்: டுவைன் பிராவோ (சென்னை), கெவன் கூப்பர் (ராஜஸ்தான்), பொலாட் (மும்பை).

தென் ஆப்ரிக்கா: டுபிளசி (சென்னை), ஆல்பி மோர்கல் (சென்னை), கிறிஸ் மோரிஸ் (சென்னை).

அவுஸ்திரேலியா: நதன் கவுல்டர்-நைல் (மும்பை), மைக்கல் ஹசி (சென்னை), மிட்சல் ஜோன்சன் (மும்பை), ஷேன் வட்சன் (ராஜஸ்தான்).

இலங்கை: திசார பெரேரா (ஐதராபாத்).

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த மும்பை அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுகிறார்.

கடந்த தொடரில் மும்பை அணியின் அணித்தலைவராக இருந்த அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் பங்கேற்கவில்லை. இவர், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் 7 போட்டியில் 41 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.

மும்பை அணிக்காக மட்டும் விளையாடும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க, தனது மனைவியின் பிரசவத்துக்காக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டுக்கு, இது கடைசி தொடர்.