குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் சைபர் குற்றங்களுக்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வரவுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தில் பாதுகாப்பு குறைவுள்ளதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் ஹரின் இதன்போது கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன் கல்வியில் சிறந்து விளங்கும் ஒருவர் என்பதால் அவருக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருப்பின் வௌ்ளை வேன் வந்திருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், ஆனால் நாம் அந்த மாணவனுக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவருக்கு வேலைவாய்ப்பு
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இவ்வாறான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய கம்பனிகளில் ஒன்றான எமது நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த இளைஞனை உடனடியாக விடுவித்து நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்ல வழியமைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







