வவுனியாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு இந்தியாவில் 7வது முறையாகவும் விளக்கமறியல்!!

651


Cople

தமிழக அகதிகள் முகாமில் இருந்து கடல் வழியாக சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதிக்கு 7வது முறையாகவும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வரை குறித்த தம்பதியினரை விளக்கமறியலில் வைக்குமாறு வேதாரண்யம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துஷ்வந்த் மற்றும் இவரது மனைவி துவாரகா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சகிதா.

குறித்த மூவரும் கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் கண்ணாடி இழைப் படகு ஒன்றில் தவித்தபோது மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் படையினர் குறித்த தம்பதியினரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த தம்பதி கோவை மாவட்டம், கோட்டூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து தப்பி, சட்டவிரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றமை தெரியவந்தது.

இதையடுத்து, இவர்கள் மீது இந்திய கடவுச் சீட்டு சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அத்துடன், கோட்டூர் பகுதியில் இடம்பெற்ற சில குற்றச் செயல்கள் மற்றும் விபத்து வழக்களில் துஷ்வந்த்துக்கு தொடர்பு இருப்பதாகத் தனிப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த தம்பதியினருக்கு ஏற்கனவே 6 முறை விளக்கமறியல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 7வது முறையாக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.