வவுனியாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டுவந்த 5 பேர் பொலிசாரால் கைது!!

688

 
வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயதங்கள், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா மற்றும் கிளிநோச்சி பகுதிகளிலுள்ள வீடுகளில் சி.ஐ.டி எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், மற்றும் முஸ்தபா ஹாஜ்தீன் ஆகியோர் உட்பட 5 பேரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து அங்கிருந்த ஒருவரை காயப்படுத்திவிட்டு 35 பவுண் நகைகள் கடந்த மாதம் 13 ஆம் திகதி கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸிரகுமார, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாந்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ன விஜயமுனி ஆகியோரின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமிந்த செனரத் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளில் கிளிநொச்சியைச் சேர்ந்த மனோகரன் சீலன் நிசாந்தன், வவுனியாவின் பூந்தோட்டம், பட்டக்காடு, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மதியரட்ணம் திலீப், ஆறுமுகம் விஜயகுமார், அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், முஸ்தபா ஹாஜ்தீன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடந்தையாக திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்ய உதவிய ஒருவரும், வவுனியா நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தமையும் இவர்கள் கிளிநொச்சி, மகாறம்பைக்குளம், கனகராயன்குளம், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 28 பவுண் தங்க நகை, இரண்டு கைக்குண்டுகள், உள்ளூர் துப்பாக்கி, வாள், இரண்டு கத்திகள், தொலைக்காட்சிப்பெட்டி, தளபாட வேலைகளுக்கு பயன்படுத்தும் 8 இலத்திரனியில் பொருட்கள், இரு நவீனரக மோட்டார் சைக்கிள்கள், போலிக் கைத்துப்பாக்கி, பெண்களின் ஆடைகள், எரிவாயு சிலிண்டர், உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து 550 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

1 IMG_0134 IMG_0137 IMG_0142 IMG_0146 IMG_0150 IMG_0152 IMG_0158 IMG_0159 IMG_0172 IMG_0175 IMG_0187