100 வயதில் 81 பேர் : விசித்திர கிராமத்தின் ரகசியம் என்ன?

277

Age

இத்தாலியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தாலியின் acciaroli என்ற கிராமத்தில் மொத்த மக்கள் தொகையானது வெறும் 700 எண்ணிக்கைதான். ஆனால் இந்த கிராமத்தில் சதம் கண்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வருபவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

இங்குள்ளவர்களின் உணவு பழக்க வழக்கமே நீண்ட ஆயுளுடன் இங்குள்ள மக்கள் வாழ்வதற்கு முதல் முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அந்தரங்க வாழ்க்கையிலும் இவர்கள் சிறந்து விளங்கியுள்ளதும் நீண்ட ஆயுள் வாழ்வதற்கு காரணம் என கூறுகின்றனர்.

ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளில் வாழும் முதியவர்கள் இருதய நோயினாலும், உளவியல் பிரச்னைகளாலும், வயது தொடர்பான பல இன்னல்களிலும் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த குட்டி கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் தள்ளாத வயதிலும் பெருமகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆலிவ் ஆயில், காய்கறிகள், மீன் மற்றும் பழ வகைகளையே விரும்பி உண்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் மீன் உணவை விரும்பி எடுத்துக்கொள்கின்றனர். மட்டுமின்றி எவ்வித ரசாயன கலவையும் சேர்க்காத இயற்கையான பழ வகைகள் மற்றும் காய்கறிகளையே பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலானவர்கள் அவர்களின் வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறி பழங்களை மட்டுமே உணவாக பயன்படுத்துகின்றனர். இறைச்சி உணவுகளை கூட அவர்களே சொந்தமாக தங்கள் குடியிருப்பில் பராமரிக்கின்றனர்.

இந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் ரசாயன தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, இயற்கை எழில் கொஞ்சும் கிராமமாக தொன்று தொட்டே பராமரித்தும் வருகின்றனர்.

சிலர், இங்குள்ளவர்களின் ஜீன்களில் நீண்ட ஆயுள் வாழும் தன்மை இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் rosemary என்ற மருத்துவ குணம் நிறைந்த தழையை அதிகம் எடுத்துக்கொள்வதால் இவர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதாகவும் கூறுகின்றனர் சிலர்.