யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு பேரையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சுமத்தி, யாழ் மேல் நீதிமன்றத்தி;ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முதற் தடவையாக இன்று (06) செவ்வாய்க்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இம்மாதம் 20 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, 6 பேருக்கும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 12 தடயப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், 16 பேர் சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.






