பொலிஸ்மா அதிபரின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து, பெண்ணொருவரை ஏமாற்றிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் நியூஸிலாந்தில் வசிப்பவர் எனவும், இலங்கை வந்தவேளையே இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்றையதினம் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் இவரை ஆஜர்படுத்தியவேளை நாளை வரை (08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தினம் தினம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான குற்றம் இழைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த விஷேட பயிற்சி அளிக்கப்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






