ஆசிய நாடுகளிலேயே மிகவும் மோசமான விமான நிலையங்களின் தரப்படுத்தலில் இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
வெளிநாட்டு இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள இந்த தரப்படுத்தலில் நேபாளத்தின் காத்மண்டு ட்ரிபுவான் சர்வதேச விமான நிலையமானது முதலிடம் வகிக்கிறது.
இப்பட்டியலில் உஸ்பெகிஸ்தானின் டாஸ்கெண்ட் சர்வதேச விமானநிலையம் இரண்டாம் இடத்தையும் ஆப்கானிஸ்தானின் காபுல் ஹமீட் கர்சாய் சர்வதேச விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.
விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு இவ் வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்பயணகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் உணவு உபசரிப்புகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அத்துடன் விமானப்பயணிகளின் பயணப்பொதிகள் தொடர்பில் பொறுப்புக் கூறலும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பல்வேறு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.
விமான நிலைய வளாகம் கழிவுப் பொருட்களால் சூழ்ந்துள்ளமை, மலசலக்கூட கட்டமைப்பு சுகாதாரமான முறையில் காணப்படாமை போன்றவற்றினை குறித்த இணையத்தளம் குறைபாடாக குறிப்பிட்டுள்ளதுடன் விமான நிலைய ஊழியர்களின் திறமையற்ற செயற்பாட்டினையும் குறைபாடுகளில் ஒன்றாக உள்ளடக்கியுள்ளது.
எனினும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுள் உள்நாட்டு தொலைபேசி நிறுவனங்களின் சிம் அட்டைகளை பெற்றுக் கொள்வதறகான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை மிகவும் அனுகூலமான விடயமொன்றாகும் என அவ்விணையத்தம் குறிப்பிட்டுள்ளது.






