சச்சின் சாதனை முறியடிக்கக் கூடியது தான் ஆனால் எளிதல்ல : வெங்கடேஷ் பிரசாத்!!

397

Venkatesh-Prasad

தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி இரண்டு சர்வதேச T20, ஏழு ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் சமீப காலமாக இந்திய அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. மூத்த வீரர்கள் அணி மட்டுமல்லாமல், இந்தியா ஏ, 19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட அணிகளும் சிறப்பாக விளையாடின.

வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடரில் இந்திய அணிக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது. தென் ஆப்ரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல.

குறிப்பாக துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். ஏனெனில் தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்சர் மற்றும் சுவிங் பந்துகளை சமாளிப்பது கடினம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், துல்லியமாக பந்து வீசினால் மட்டுமே சாதிக்க முடியும்.

இரண்டு தொடர்களில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். இவருக்கு, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேகப் பந்து வீச்சாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தது பாராட்டுக்குரியது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆபிரிக்க ஆடுகளத்தில் இவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.

இந்திய அணி அதிகளவு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். டெஸ்ட் போட்டி மட்டும் தான் உண்மையான கிரிக்கெட். ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் அதிகளவு ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்து வருகிறது.

அதேபோல சச்சின் படைத்த சாதனைகள் முறியடிக்க கூடியது தான். ஆனால் எளிதான காரியமல்ல. இருபது ஆண்டுகளுக்கு மேலாக போமை தக்கவைத்துக் கொண்டு உடற்தகுதி, காயம் உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் விளையாடினால் மட்டுமே முடியும் என்று கூறினார்.