வட பகுதியை எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன் : பொலிஸ் மா அதிபர்!!

630

poojitha

வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன். இங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க தமிழில் முறைப்பாடு செய்யக் கூடிய விசேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் தமிழ் மொழி மூலம் தொலைபேசியில் முறைப்பாடு செய்யும் திட்டத்தை வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன். நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்களை மிகவும் நேசிக்கின்றோம்.

தமிழ் மொழியில் முறைப்பாடு செய்யும் இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அதாவது இந்த சேவையின் மூலம் நீங்கள் உங்கள் பிரச்சினைகளை பொலிஸ் மா அதிபருக்கு உங்கள் தாய் மொழியான தமிழ் மொழியிலேயே முன்வைக்கலாம்.

எதிர்வரும் காலங்களில் இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம். உங்களது பிரச்சினையை தீர்க்க எனது உதவி தேவைப்பட்டால் எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

உதவி வழங்க நான் எவ்வேளையிலும் தயாராக இருக்கின்றேன். வடபகுதியில் சட்டவிரோத, சமூக விரோத, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையின் ஊடாக உங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெரியப்படுத்துமிடத்து உடனடியாக அவை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்போம்.

இதன்மூலம் குற்றச் செயல்களையும், சமூக விரோதச் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும். இது தவிர கடத்த காலத்தில் பொலிசாருக்கும், மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்தக் கூடியதாகவும், பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இது அமையும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இத்திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னார் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்து கொள்ள முடியும்.