யாழ் பிரணவனின் படுகொலை குற்றவாளிகளை 10 நாட்களுக்குள் கைதுசெய்ய கடும் உத்தரவு!!

693

murder

மானிப்பாய் சங்குவேலி பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பிரணவனின் கொலையில், கொலையாளியுடன் வந்த நபர் நீதிமன்றில் இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

மானிப்பாய் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (31) என்பவர் கடந்த மாதம் 17ஆம் திகதி மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் அவரது நண்பர்கள் தான் வெட்டியவர்கள் என அளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் சயின் என்பவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது இளவாலை வழிப் போக்குவரத்து பேருந்தின் உரிமையாளரான சிவகுமாரன் பிரணவனின் சகோதரனான கனகலிங்கம் மன்மதன் என்பவரை சன்னா மற்றும் அவரது நண்பர்கள் வெட்ட வந்த போது ஆள்மாறி பிரணவனை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்த தகவலின் அடிப்படையில் ஆலடி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராசா சயிந்திரன்(25) (சயின்) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் கண்கண்ட சாட்சியான மன்மதனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை.

அதன் பின்னர் இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடாத்துவதற்கு திகதியிடப்பட்ட நிலையில் கண்கண்ட சாட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை தாண்டி சாட்சி மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகி கொலைக்கு உடந்தையாக வந்த நபரை அடையாளம் காட்டினார்.

இதேவேளை அடையாள அணிவகுப்பின் பிரகாரம் குறித்த நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த ஆமை றொசான் என்று அழைக்கப்படுபவரையும் பிரணவனை கொலை செய்த ஏனைய மூவரையும் 10 நாட்களுக்குள் கைதுசெய்து எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் விசாரணை செய்யப்படவுள்ள வழக்கின் போது மன்றில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி யூட்சன், மானிப்பாய் பொலிஸாருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து வழக்கினை ஒத்திவைத்தார்.