வடமாகாண அவசர அம்புலன்ஸ் சேவையை சர்வதேச தரத்தற்கு உயர்த்த நடவடிக்கை!!

564

 
வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ் சேவையொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின் கீழ் வடமாகாணத்தில் எப்பிரதேசத்திலும் 24 மணிநேரமும் விபத்துக்களின்போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் கீழ் 100 வைத்தியசாலைகளைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்ட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவையை மேலும் தரமுயர்த்த இலண்டன் அம்புலன்ஸ் சேவையின் உதவியை கோரியிருந்தேன். இதற்கமைவாக இச்சேவையை மேலும் வினைத்திறனுடைய சேவையாக மாற்றும் நோக்குடன் இச்சேவையில் ஈடுபடும் அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் உயிர்காப்பு முதலுதவி சம்பந்தமான பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் அம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த இரண்டு வளவாளர்கள் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 12 வைத்திய அதிகாரிகளுக்கு 29.08.2016 முதல் ஒருவாரகால பயிற்சியை வழங்கினார்கள். அடுத்த கட்டமாக பயிற்சியை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளினால் கடந்த 05.09.2016 முதல் ஒரு வாரகாலத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் தொகுதி அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சகல அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சியை நடாத்துவதற்கான நிதி உதவியை அமெரிக்காவை தளமாகக்கொண்ட சர்வதேச மருத்துவ சுகாதாரக்கழகம் வழங்கியிருந்தது. இச்சேவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடன் வடமாகாணம் முழுவதும் விளம்பர பதாதைகளை அமைப்பதற்கும் மேற்படி நிறுவனம் நிதி உதவியை வழங்கியிருந்தது என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

amb2 amb3 amb4 amb5