12 வயதான சிறுவன் ஒருவன் சுமார் 160 கிலோமீற்றர் தூரம் காரை செலுத்திச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் லிம்பபாச் ஃப்ரோஹ்னோ நகரில் வசிக்கும் இச் சிறுவனையும் 13 வயதான அவனின் நண்பனையும் காணவில்லை என பொலிஸாரிடம் இச் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதன்பின் மேற்கொண்ட விசாரணையின்போது, தனது தாத்தா, பாட்டியின் வீட்டை அச் சிறுவனும் அவனின் நண்பனும் சென்றடைந்தமை தெரியவந்தது.
12 வயதான இச் சிறுவன் ஒருவரிடமும் கூறாமல் தனது பெற்றோரின் காரை சுமார் 160 கிலோமீற்றர் (100 மைல்) தூரம் காரை செலுத்திச் சென்றதை அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
வேகக் கட்டுப்பாடு எதுவும் இல்லாத அதிவேக நெடுஞ்சாலையொன்றுக்கூடாகவும் இச் சிறுவன் வெற்றிகரமாக வாகனத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டவசமாக மோசமான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இச் சிறுவன் 14 வயதுக்குட்பட்டவன் என்பதால், ஜேர்மனிய சட்டவிதிகளின் படி அவனுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.






