தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலையில் மூன்று சிங்கக் குட்டி கள் பிறந்துள்ளன. விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜேர்மனியின் ஹெகன்பெக் மிருகக் காட்சிசாலை மற்றும் தென் கொரியாவின் ஷியோல் மிருகக் காட்சிசாலை ஆகியவற்றினால் இரு சிங்கங்கள் தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறு பெறப்பட்ட தாய் சிங்கத்துக்கு சகீனா எனவும் தந்தை சிங்கத்துக்கு தோர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிங்க தம்பதிக்கே இம் மூன்று சிங்கக்குட்டிகளும் பிறந்துள்ளன.
ஆகஸ்ட் 28ஆம் திகதி பிறந்த இந்த மூன்று சிங்கக் குட்டிகளும் சிறந்த தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாக தேசிய மிருகக் காட்சிசாலை திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்பு இத் தம்பதிக்கு பிறந்த சிங்கக் குட்டிக்கு அதன் தாய் பாலூட்டுதற்கு மறுப்பு தெரிவித்து வந்திருந்ததாகவும் ஆனால், தற்போது பிறந்துள்ள குட்டிகளுக்கு தாய் சிங்கம் விருப்பத்துடன் பாலூட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.






