வவுனியாவில் மதுபோதையில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

294

dead

வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (15.09.2016) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா பாலமோட்டை, ஊறாக்குளம் பகுதியில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி பரமேஸ்வரன் (வயது 41) மேசன் தொழிலாளி. தினமும் மதுபோதையில் வரும் அவர் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடாத்தி வந்துள்ளார்.

கடந்த 04.09.2016 அன்று மனைவி இருவருடன் சண்டையில் ஈடுபட்டதுடன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். எனினும் தாயார் கணவனுடன் போய் இருக்குமாறு தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத மனைவி ஆச்சிபுரம் பகுதியில் தனது சகோதரியின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் ஒரு பிள்ளையுடன் சென்று தங்கியுள்ளார்.

14.09.2016 அன்று கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் கோரியுள்ளார். மறுநாள் 4.30 மணிக்கு வீட்டிற்கு வருவதாக மனைவி தெரிவித்துள்ளார். எனினும் மறுநாள் 15.09.2016 மாலை 3.30 மணிக்கு தொலைபேசியில் குறித்த நபர் தனது தாயின் தமபியுடன் தொடர்பு கொண்டு தான் விஷம் அருந்திவிட்டதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து இவரை பல இடங்களுக்குச் சென்று தேடியபோது கிடைக்கவில்லை பின்னர் சுந்தரபுரம் செல்லும் வீதியில் மதுபோதையில் காணப்பட்ட இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குறித்த நபர் வரும் வழியில் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரணையினை மேற்கொண்டதுடன் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துடன் சடலத்தினை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.