இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகரெட், மது போல இணையமும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நெட் சென்டருக்கு போய் இணையதளங்களை உபயோகித்தவர்கள் இன்றைக்கு உள்ளங்கைகளில் மொபைல் போன் மூலம் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்குவதோடு, மெயில், சட்டிங் என பலவிதங்களில் இணையத்தை உபயோகிக்கின்றனர்.
இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரிடம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.
ஒரு நாள் இணைய இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இணையம் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர்.
இணைய இணைப்பு இல்லை என்றால் ஒருவர் அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள லீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் மன அழுத்தத்துக்கும் இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.