ஜப்பானில் தொடரும் கொடூர டொல்பின் வேட்டை!!(படங்கள்)

609

1

ஜப்பானின் மிகப்பிரபலமான டொல்பின் வேட்டை டைஜியில் நடத்தப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைப் பகுதியில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் தினமும் வேட்டையாடப்படுகின்றன.

செப்டம்பர் முதல் பெப்ரவரி வரை 6 மாதங்கள் டொல்பின் வேட்டை தொடர்கிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் 2000 டொல்பின்கள் கொல்லப்படுகின்றன.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே மோட்டார் படகுகளில் மலைக்குகைக்கு வந்து, வலை விரித்துக் காத்திருக்கிறார்கள் வேட்டைக்காரர்கள்.

இடப்பெயற்சி செய்யும் டொல்பின்கள் கூட்டமாக அந்தப் பகுதியைக் கடக்க முயலும்போது, வலையால் தடுக்கப்பட்டு, வேட்டையாளர்களின் ஈட்டிகளுக்குப் பலியாகின்றன. கூர்மையான உலோகக் கம்பிகளை வைத்து, டொல்பின் உடலில் பலமுறை குத்துகிறார்கள்.

அந்தப் பகுதி நீரே சிவப்பாக மாறிவிடுகிறது. இப்படிச் செய்வதால் டொல்பின்களின் உளவியல் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.
குட்டிகளையும் இளம் டொல்பின்களையும் கொல்லாமல் விட்டுவிட்டாலும் அவை மன அழுத்தத்தில் விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. ஏனென்றால், டொல்பின்கள் கூட்டமாக வசிக்கக்கூடியவை. மிக அன்பாகப் பழகக்கூடியவை.

கண் முன்னே தங்கள் உறவினர்கள் கொல்லப்படும் காட்சியைப் பார்க்கும் டொல்பின்கள், மனிதர்களைப் போலவே துன்பமடைகின்றன. டைஜி டொல்பின் வேட்டையை லூயி பிசியோஸ் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார்.

அதற்குப் பிறகு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. விலங்குகள் நல ஆர்வலர்களும் வேட்டையைத் தடுக்கப் போராடினர். ஆனாலும் தடுக்க இயலவில்லை.

பல கோடி பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டதும் ஜப்பானிய அரசாங்கம் ஆதரவு அளிப்பதும் தான் இதற்குக் காரணம்.
உடலுக்குத் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் கலக்கப்பட்ட டொல்பின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என்று தொடர்ந்து செய்துவந்த விழிப்புணர்வு மூலம், ஜப்பானிய மக்களிடம் டொல்பின் இறைச்சிக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.

ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டைஜி டொல்பின் இறைச்சிகளை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

2 3 4 5